உலகளவில் கணிசமான சாதனைப் படைப்புகளையும் படைப்பாளிகளையும் கொண்ட தமிழ் சிறுகதை மரபில் இராசேந்திர சோழனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'எட்டு கதைகள்' ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்சியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ் சாத்தியம் அவர். சிக்மண்ட் ப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள் உலகளவிலும் தமிழ் படைப்புலகிலும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், பிராய்டின் சாயலேயின்றி அசாதாரணமாக மனிதர்களின் உளவியலுக்குள் குறிப்பாக ஆண்-பெண் உறவு சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணித்த படைப்புகள் இராசேந்திர சோழனுடையவை. வட ஆற்காடு வட்டார வழக்கை உள்வாங்கி சிறுகதை என்ற வடிவத்தின் கூர்மை, மௌனம், மொழியின் செம்மை, விமர்சன வன்மையைக் கொண்டவை. ஒரு பெண்ணின் சுதந்திரமான பாலுறவுத் தேர்வு ஆண் மனத்தில் உருவாக்கும் அச்சங்கள், கலவரங்களை அதன் பதைபதைப்புடனேயே ஆக்கிய இவரது குறுநாவலான 'சிறகுகள் முளைத்து' படைப்பு சமீபத்தில் படிக்கும்போதும் அழுத்தமான அனுபவத்தையே தருகிறது. எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான 'பறிமுதல்' முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான தி